Monday, May 23, 2016

BEFORE STARTING A BUSINESS PART - 6 தொழிற்கடன் வாங்க சில குறிப்புகள்...

 

             தொழில் தொடங்கி அம்பானி போல ஆகிவிடலாம் என்கிற கனவோடு களமிறங்குகிற பலர் எடுத்த எடுப்பிலேயே தடைபட்டு நின்றுவிடுகிறார்கள். அதற்கு அவர்கள் சொல்லும் காரணம், 'பணம் இல்லை; கடன் கேட்டேன்; கிடைக்கவில்லை' என்பதாகவே இருக்கிறது. 

டாடாவோ, அம்பானியோ பெரிய முதலோடு தங்கள் தொழிலை ஆரம்பிக்கவில்லை. கடன் வாங்கித்தான் ஆரம்பித்தார்கள். இவ்வளவு ஏன் பல்வேறு வங்கிகளில் 9,000 கோடி ரூபாய் கடன் பெற்று திருப்பிச் செலுத்த முடியாமல் திணறி வரும் பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா கடன் வாங்கித்தான் ஆரம்பித்தார்,கடன் வாங்கித்தான் இப்ப படாத பாடுபடுரார் (அவரு எப்படி இருக்காரோ யாருக்கு தெரியும்). நிறுவனத்துக்கான கடனை வாங்க அந்தக் காலத்தில் அவர்கள் பட்ட கஷ்டங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. அவர்களோடு ஒப்பிட்டால் தொழிற்கடன் வாங்க இன்றைக்கு உள்ள சிரமங்கள், பிரச்னைகள் குறைவே. 




இன்று நேற்று நாளை படம் எல்லாரும் பார்த்திருப்பிர்கள். அதுல hero loan வாங்குறத்துக்கு பேசுர விசயத்த நல்லா கவனிங்க.. பெரும்பாலும் அப்படி நடக்காது. அதுல bank manager ஒன்னு சொல்லுவாரு தம்பி..! இங்க ஐடியாக்குலாம் பஞ்சமில்ல கரும்பு ல இருந்து  கயரு தயாரிக்குரது,காட்டன் ல இருந்து காண்டம் தயாரிக்குரதுனு. நம்மல பொருத்தவரை ஐடியா ஒரு விசயமே இல்ல எல்லாருகிட்டயும் ஐடியா ரெடிய இருக்கு ஆனா மத்தவங்க கிட approach தான் நமக்கு பிரச்சனை. பயத்துல பேசுரது, சொல்ல வர விசயத்தை கரெக்ட்டா சொல்லாதது, இன்னும் சில பேர் செய்ய போற விசயத தெளிவே இல்லாம பேசுரது. இந்த மாதிரி விசயம் தான் உங்களுக்கு பெரிய பலவீனம்.

சில முன் தயாரிப்புகளோடு அணுகினால் அந்தப் பிரச்னைகளையும் பிஸினஸ்மேன்கள் தவிர்த்து நிச்சயம் வெற்றி பெறலாம்.

நீங்கள் என்ன செய்ய போகிறீர்கள் என்பதில் தெளிவாகவும்,உறுதியுடனும் இருங்கள்....

'வேலை செய்யப் பிடிக்கவில்லை; அதனால் பிஸினஸ் செய்யப் போகிறேன்' என்று சொல்லி தொழிலில் இறங்குகிறவர்கள், வெற்றி பெறுவது கடினம்தான். அதே போல செய்ய நினைக்கும் தொழில் பற்றிய முழுமையான அறிவு, தெளிவான நம்பிக்கை இல்லாமல் தொழிலில் இறங்குகிறவர்களுக்கும் தோல்வி நிச்சயம்தான். தொழிற்கடன் கேட்டு வங்கியை அணுகுகிறவர்களை வங்கி மேலாளர் முதலில் சோதிப்பது அவர்களின் நம்பிக்கையைத்தான். தொழில் முனைவர் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் வங்கி தரப்பில் உன்னிப்பாகக் கவனிக்கப்படும். சிலசமயம் வங்கி மேலாளர் தொழில்முனைவரின் உறுதியைக் குலைக்கும் வகையில் சில கேள்விகளைக் கேட்கவும் செய்யலாம். 'நீங்கள் சொல்கிற பிஸினஸை எனக்குத் தெரிந்த நபர் ஒருவர் செய்தார். அதில் அவருக்கு பலத்த நஷ்டம். வேறு ஏதாவது பிஸினஸூக்கான ஐடியா உங்களிடம் இருக்கிறதா?' என வங்கி மேனேஜர் கேட்பதாக வைத்துக் கொள்வோம். இதற்கு தொழில் முனைவரின் பதில் என்னவாக இருக்கும்..? உடனே பதற்ற மடையும் பலர், 'சார், என்கிட்ட இன்னொரு பிஸினஸூக்கான ஐடியாவும் இருக்கிறது' என்றுதான் சொல்வார்கள். இந்த ஒரு வரி பதில் போதும், உங்கள் தொழில் மீது உங்களுக்கு ஆழமான நம்பிக்கை இல்லை என்று சொல்ல. ஆனால், இத்தகைய பதில்களால் மட்டுமே 'கடன் கிடைக்காது' என்று சொல்லிவிட முடியாது. ஆனால், இது போன்ற சின்ன சின்ன விஷயங்கள் நீங்கள் செய்யப் போகிற தொழில் மீது உங்களுக்கு இருக்கும் உறுதியைக் காட்டிவிடும். எனவே தெளிவான பார்வை, உறுதியான திட்டம் தேவை.

பிஸினஸ் பிளானில் என்ன இருக்க வேண்டும்?

போன பதிவில் சொன்னது போல BUSINESS PLAN DOCUMENT ரெடி பண்ணுங்க..நீங்கள் செய்யப் போகிற பிஸினஸ் இதுதான் என்று முடிவு செய்துவிட்டால் அதற்கான பிளானை தயார் செய்ய வேண்டும். 

முதலில் உங்களைப் பற்றிய தகவல்கள், நீங்கள் யார், என்ன செய்து கொண்டிருந்தீர்கள், இனி என்ன செய்யப் போகிறீர்கள் என்ற விவரங்கள் இருக்க வேண்டும். தொடங்கப் போகிற தொழிலைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும், எப்படித் தெரியும், அந்தத் தொழிலில் என்ன புதுமைகள் செய்யப் போகிறீர்கள்; உங்களுக்கான மூலப்பொருட்கள் எங்கு கிடைக்கும்; உங்களின் வாடிக்கையாளர்கள் யார் என்பது பற்றி தெளிவாகக் கூற வேண்டும். இந்தத் தொழில் மூலம் மாதத்துக்கு எவ்வளவு வருமானம் கிடைக்கும் என்கிற தோராயமான கணக்கு வேண்டும். இதற்கு டி.எஸ்.சி.ஆர். என்கிற விகிதத்தை நிச்சயம் பார்ப்பார்கள். Debt-Service Coverage Ratio என்பதன் சுருக்கமே டி.எஸ்.சி.ஆர். அதாவது, ஒரு மாதத்துக்கு நீங்கள் 15 ஆயிரம் சம்பாதிக்கிறீர்கள் எனில், அசலுக்கும் வட்டிக்குமாகச் சேர்த்து 10 ஆயிரம் போக, குறைந்தது 5 ஆயிரம் உங்களிடம் இருந்தால்தான் தொடர்ந்து பிஸினஸ் நடத்த முடியும். அதாவது, இந்த விகிதம் 1.5-க்கு மேல் இருந்தால் மட்டுமே உங்களுக்கு எளிதாகக் கடன் கிடைக்கும். நீங்கள் செய்யும் பிஸினஸில் இந்த வருமானம் உங்களுக்கு இருக்கிறதா என்பதை நீங்களே உறுதி செய்து கொண்டு, வங்கியை அணுகினால் தெம்பாகப் பேசலாம்.


கடன் வகைகள்

அடமானமில்லாத கடன் (unsecured loan)

10 லட்சம் வரைக்குமான தொழிற்கடனுக்கு எந்த விதமான அடமானமும் கேட்கக்கூடாது என்பது ஆர்.பி.ஐ. விதி. இந்த விதி காரணமாக, 10 லட்சம் வரை எந்தவித அடமானமில்லாமல் கடன் கிடைக்கும். ஒரு வேளை வங்கிகள் அடமானம் கேட்டால் அது விதியை மீறிய செயலாகவே கருத வேண்டும். தவிர, சிறு மற்றும் குறு தொழில்களை ஊக்குவிக்க மத்திய அரசும் சிட்பியும் (SIDBI) சேர்ந்து ஒரு கோடி ரூபாய் வரைக்கும் எந்த விதமான அடமானமும் இல்லாமல் கிரெடிட் கேரண்டி ஸ்கீமில் (Credit Guarantee Scheme CGS) கடன் தருகிறார்கள். ஆனால் இந்தத் திட்டத்தில் கடன் பெற பதிவு செய்ய வேண்டும். இது பற்றி வங்கிகளிடம் கேட்டால் அவர்கள் இது சம்பந்தமான மற்ற முழு விவரங்களைத் தருவார்கள்.

அடமானக் கடன் (secured loan)

ஒரு கோடி ரூபாய்க்கு மேல் உங்களுக்கு பணம் தேவை எனில், அடமானம் இல்லாமல் கடன் கிடைக்காது. அந்த சமயத்தில் உங்களிடம் இருக்கும் சொத்துகளை அடமானம் வைத்துத்தான் கடன் பெற முடியும். ஒருவேளை இரண்டு கோடி ரூபாய் தேவைப்பட்டால் ஒரு கோடி ரூபாய் வரை கிரெடிட் கேரண்டி திட்டத்தின் மூலம் அடமானம் இல்லாமலும், மீதமுள்ள ஒரு கோடிக்கு சொத்துகளை அடமானம் வைத்தும் கடன் பெறலாம்.

எவ்வளவு சொந்தப் பணம் வேண்டும்?

பிஸினஸ் திட்டத்திலே நமக்கு எவ்வளவு தொகை தேவைப்படும் என்று தெரிந்துவிடும். அந்தத் தொகையில் குறைந்தபட்சம் 1:4.5 என்ற விகிதத்தில் (Debt-Equity Ratio) நம்மிடம் சொந்தப் பணம் இருக்க வேண்டும். அதாவது, ஒரு லட்ச ரூபாயை நீங்கள் மூலதனமாக கொண்டு வந்தால் வங்கிகள் 4.5 லட்சம் வரைக்கும் கடன் கொடுக்கும். இந்த விதிதான் நிரந்தரம் என்று சொல்ல முடியாது. மிகச் சில சமயங்களில் மட்டும் இந்த விகிதத்துக்கு கீழே சென்றால் வங்கிகள் கடன் கொடுக்கும். அது நீங்கள் செய்யும் தொழில், உங்கள் பிஸினஸ் நடக்கும் இடம் போன்ற பல காரணிகளை வைத்து வங்கிகள் முடிவு செய்யும். இருந்தாலும் முதல்முறை தொழில் தொடங்குவோர் இந்த விகிதத்துக்கும் குறைவாக மூலதனம் வைத்திருந்தால் கடன் கிடைப்பதில் சிரமம் ஏற்படலாம். உங்கள் தொழிலில் உங்கள் முதலீடு கணிசமாக இருக்க வேண்டும் என வங்கிகள் எதிர்பார்ப்பதுதான் இதற்குக் காரணம்.

வங்கிகளை எப்படி அணுகுவது?

ஒவ்வொரு வங்கியும் ஆண்டுக்கு குறிப்பிட்ட தொகையை கடனாகக் கொடுக்க வேண்டும் என இலக்கு நிர்ணயித்து செயல்படுகின்றன. அந்த இலக்குக்காக போட்டி போட்டுக் கொண்டு வங்கிகள் கடன் தருகின்றன. ஆனாலும் தொழில்முனைவோருக்கு கடன் கிடைக்கவில்லை எனில் அதற்குக் காரணம், சரியான திட்டமிடல் இல்லாததுதான்.

உங்கள் தேவை 25 லட்சம் எனில் அருகிலிருக்கும் வங்கிகளையே அணுகலாம். அவர்களே கடன் தருவார்கள். 25 லட்சத்துக்கு மேல் போகும் போது, ஒவ்வொரு வங்கியும் தொழிற்கடன்களை ஊக்குவிக்கவே தனியாக சிறுதொழில் கிளையை (SME Branch) வைத்திருக்கிறார்கள். அங்கிருக்கும் அதிகாரிகளை அணுகினால் அவர்கள் உங்களுக்குத் தேவையான ஆலோசனைகளை வழங்குவார்கள்.

தேவையான ஆவணங்கள்!

அடையாளச் சான்றிதழ், முகவரிச் சான்றிதழ், பிஸினஸ் நடைபெறும் இடத்துக்கான முகவரிச் சான்றிதழ், திட்ட அறிக்கை, வருமான எதிர்ப்பார்ப்பு (கடனை திருப்பிச் செலுத்தும் காலம் வரைக்கும்), உள்ளாட்சி மற்றும் இதர அரசு அலுவலகங்களில் இருந்து தடையில்லாச் சான்றிதழ் (தேவைப்பட்டால்), பிஸினஸ் நடைபெறும் இடம் உங்களுடையது என்றால் அதற்கான சான்றிதழ் (அ) வாடகை இடம் என்றால் ஒப்பந்தச் சான்றிதழ் போன்ற ஆவணங்கள் கட்டாயம் கொடுக்க வேண்டும். இவை தவிர, வேறு என்னென்ன ஆவணங்கள் தேவை என்பதை கடன் விண்ணப்பதிலேயே இருக்கும். அவற்றையும் கொடுத்தால் நிச்சயம் உங்கள் கடன் மனுவை வங்கி அதிகாரிகள் ஒதுக்கித் தள்ள மாட்டார்கள்!

தனிநபர் கடன்

பர்சனல் லோனின் மிகப் பெரிய சிறப்பே, எதற்காக அதை வாங்குகிறோம் என்கிற காரணம்கூடச் சொல்ல வேண்டாம். பொதுவாக, கார் அல்லது வீடு வாங்க சில லட்ச ரூபாய் குறையும் போது மீதிப் பணத்துக்காக கடன் கேட்டு வங்கியை அணுகினால் கார் அல்லது வீட்டை அடமானமாகக் காட்ட வேண்டி வரும். கடனைச் சரியாக கட்டவில்லை என்றால் அடமானம் வைக்கப் பட்டிருப்பதை வங்கி தன் வசம் எடுத்துக் கொள்ளும். இதைத் தவிர்க்க விரும்புபவர்கள் பர்சனல் லோனைப் பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறார்கள். காரணம் சொல்லத் தேவையில்லை என்பதால் எடுத்ததெற்கெல்லாம் பர்சனல் லோன் வாங்குவது சரியல்ல. காரணம் மற்ற கடனைவிட இதற்கு வட்டி மிக அதிகம். எனவே பர்சனல் லோன் வாங்குவதை கடைசி முயற்சியாக வைத்துக் கொள்ள வேண்டும்.


வங்கிகள் தயார்!

வங்கிகள் தற்போது தாராளமாக பர்சனல் லோன் தரக் காத்திருக்கின்றன. பொதுவாக, இந்தக் கடனுக்கு 14-22% வட்டி வசூலிக்கப்படுகிறது. இந்தியன் வங்கி, யுனைடெட் பேங்க் ஆஃப் இந்தியா, தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி போன்றவை

1 லட்சம் வரைக்கும்தான் பர்சனல் லோன் தருகின்றன. ஐ.சி.ஐ.சி.ஐ. பேங்க், ஆக்ஸிஸ் பேங்க், எஸ்.பி.ஐ. போன்றவை 10 லட்சம் வரைதான் கடன் தரும். அதற்கு மேல் தேவைப்பட்டால் சிட்டி பேங்க், ஹெச்.டி.எஃப்.சி., ஆர்.பி.எஸ். போன்றவற்றைத் தொடர்பு கொள்ளலாம்.
பர்சனல் லோன் வாங்கக் குறைவான ஆவணங்கள் கொடுத்தால் போதும். இருப்பிடம், அடையாளம், வருமானம் போன்றவற்றுக்கு ஆதாரம் கொடுக்க வேண்டும். மூன்று நாட்களில் கடன் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. 12-48 மாதங்களில் கடனைத் திரும்பக் கட்டலாம்.

உங்களின் சம்பளம் மற்றும் திரும்பக் கட்டும் தகுதி அதிகமாக இருக்கும் பட்சத்தில் வட்டியில் பேரம் பேசிக் குறைக்கலாம். பரிசீலனைக் கட்டணத்திலும் பேரம் பேசலாம். பர்சனல் கடன் வாங்கும் வங்கியிலேயே உங்கள் சம்பளக் கணக்கோ, கிரெடிட் கார்டோ இருந்தால் இந்தப் பேரம் நிச்சயம் கை கொடுக்கும். வட்டியைப் பொறுத்த வரையில் கடன் தொகை, திரும்பச் செலுத்தும் ஆண்டுகள், வேலையின் தன்மை, சம்பளத் தொகை, சம்பளம் வாங்குபவரா/தொழில் செய்பவரா, வாங்கும் நபரின் கடன் வரலாறு போன்றவற்றைப் பொறுத்து மாறுபடும். வங்கி கொடுக்கும் சலுகை அல்லது வாக்குறுதியை எழுத்து மூலம் பெற்றுக் கொள்வது அவசியம். 2 நபர்கள் கேரண்டி கையெழுத்துப் போட வேண்டி இருக்கும்.

வட்டியைக் கவனிங்க!

பர்சனல் லோனில் வட்டி எந்த முறையில் கணக்கிடப்படுகிறது என்பது மிக மிக முக்கியம். ஃபிளாட் வட்டியா? (Flat Rate) அல்லது குறையும் வட்டியா? என்பதைக் கவனிக்க வேண்டும். ஃபிளாட் முறையில் மொத்தக் கடனுக்கும் மொத்த ஆண்டுக்கும் வட்டி கணக்கிடப்படும். உதாரணத்துக்கு ஒருவர் 15% வட்டியில் 1 லட்சம் கடன் வாங்கி அதனை மூன்றாண்டுகளில் திரும்பச் செலுத்துவதாக வைத்துக் கொள்வோம். ஃபிளாட் வட்டி என்றால் மாதத் தவணை 4,028-ஆக இருக்கும். அந்த வகையில் மூன்றாண்டுகளில் வட்டி மட்டும் 45,000 கட்டி இருப்பீர்கள். இதுவே குறையும் வட்டி முறை என்றால் கடன் தொகை குறையக் குறைய அசலில் அந்தத் தொகையைக் கழித்துக் கொண்டு மீதிக்கு மட்டும் வட்டியைக் கணக்கிடுவார்கள். மாதத் தவணை 3,476 -ஆக இருக்கும். இம்முறையில் மொத்த வட்டி 24,795. அதாவது, குறையும் வட்டி முறையில், ஃபிளாட் வட்டியைவிட 20,205 குறைவாகக் கட்டினால் போதுமானது.

No comments:
Write comments

Total Pageviews

chess24.com your playground

addthis

Linkwithin

Related Posts Plugin for WordPress, Blogger...

Add to any

get our extension